டைடானிக் கதையின் நீதி
ராத்திரி தூங்கப் போகும்போது நா அப்பாவுக்கு ஒரு கதை சொன்னேன். அது டைடானிக் கதை. ஒரு கப்பல் செஞ்சாங்க. அதுக்கு 11 மாடி இருந்துச்சு. உள்ளே விளையாட்டு எல்லாம் இருந்துச்சு. இது மாதிரி கப்பலை யாரும் பாத்ததே இல்லன்னு சொன்னாங்க. ஒரு மிதக்குற நகரம்னு அந்தக் கப்பலைச் சொன்னாங்க. அது இங்கிலாந்துல இருந்து அமெரிக்காவுக்கு வந்துச்சு. அதுல நிறைய ஆக்கள் ஏறினாங்க. கப்பல் போகும்போது அதொட கேப்டன் ஒரு பெரிய பனிப்பாறையைப் பாத்தார். அப்போ அந்தக் கப்பலைத் திருப்பப் பாத்தார் ஆனா, திருப்ப முடியலை. கப்பல் அதுல போயி உரசிடிச்சு. கப்பல்ல இப்படி (கைகளைக் கோர்த்து வளைத்துக் காட்டி) ஒரு ஓட்டை வந்திடிச்சு. அதுக்குள்ள தண்ணி வந்திடிச்சு. கப்பல் இப்படி ஆடுது. இப்படி ஆடுது. அப்பறம் இப்படி இப்படி முழுகுது. அப்ப நிறைய ஆக்கள் கடலுக்குள்ள குதிச்சிட்டாங்க. லைப் போட்ல கொஞ்சம் பேரு ஏறிட்டாங்க. அடுத்த நாள் காலையில வரைக்கும் காப்பாத்த யாரும் வரலை. அப்புறமா ஒரு கப்பல் வந்திச்சு. அதுக்கு எல்லாரும் தீக்குச்சியைக் கொழுத்தி, பேப்பரை எரிச்சுக் காட்டுறாங்க. அந்தக் கப்பல் வந்து எல்லாரையும் காப்பாத்திடிச்சு.
கதை முடிஞ்சதும் அப்பா சொன்னாங்க, "ச்ச, ரொம்ப வருத்தமா இருக்கு, இல்ல?" நா சொன்னேன், "கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் மகிழ்ச்சி." அப்பா கேட்டாங்க, "ஏன் மகிழ்ச்சி?" அதுக்கு நா சொன்னேன், "வருத்தம் ஏன்னா அந்தக் கப்பல் மூழ்கிடிச்சு. மகிழ்ச்சி ஏன்னா காலையில இன்னொரு கப்பல் வந்து நிறைய ஆக்களைக் காப்பாத்திடுச்சில்ல, அதுக்கு."
இன்னக்கி எனக்கு நல்ல கனவா வரும்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டேன்.
இன்பம் துன்பம் எல்லாம் நம்ம பார்க்கிற விதத்திலதான் இருக்குன்னு அப்பாவுக்கு விளங்கியிருக்கும்!